திருவாரூர்: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் சுவாமி கோயில் உள்ளது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் சமய குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் இருந்து வருகிறது. கோயிலின் மூலவராக வன்மீகநாதரும் உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன்பின்னர் கோயிலின் மேற்குபுறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டில் ஆழி தேரோட்டம் வரும் மார்ச் 15ம் தேதி நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி, தேரடி விநாயகர் கோயில் முன் நேற்று பக்தர்களின்றி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி திருஞானசம்மந்தர் பெருமான் தனது சன்னதியிலிருந்து எழுந்தளும் நிகழ்ச்சியும் நடந்தது.