பார்ல்: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி பார்ல் நகரில் இன்று தொடங்கியது. முன்னதாக தொடர் குறித்து இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் அளித்தபேட்டி: கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி சில தனித்துவமான சாதனைகளை படைத்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் இதற்கு முன்பு தொடரை வெல்லாத இடங்களில் சாதித்து காட்டியிருக்கிறோம். அவரது கேப்டன்ஷிப் திறமை வியப்புக்குரியது. ஒவ்வொருவரின் மிகச்சிறந்த திறமையை வெளிக்கொண்டு வந்தார். நம்பிக்கையூட்டினார்.
அதே போல் என்னாலும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். டோனி, கோஹ்லி இருவரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளேன். அவர்கள் இருவரிடமும் நிறைய விசயங்களை கற்று கொண்டுள்ளேன். அந்த பாடம் கேப்டனாக இருக்கும் போது நிச்சயம் கைக்கொடுக்கும். வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை கோஹ்லி எங்களிடம் விதைத்துள்ளார். அந்த நம்பிக்கையுடன் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறோம். எந்த ஒரு வீரருக்கும் அணியை வழிநடத்துவது என்பது கனவாக இருக்கும்.
நானும் அதில் விதி விலக்கல்ல. டெஸ்ட் கேப்டன் பதவி உற்சாகத்துடன் உணர்வுபூர்வமானதாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே இப்போது அதை நான் எதிர்நோக்கவில்லை. ஆனால் இது நடந்தால் அணியை நல்ல நிலைக்கு உயர்த்த எனது மிகச்சிறந்த முயற்சியை வெளிப்படுத்துவேன். எங்களிடம் சில யோசனைகள், சில திட்டங்கள் உள்ளன. வரும் தொடரில் அந்த விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறோம், நாங்கள் முயற்சி செய்ய பயப்படும் குழு அல்ல. உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதனை மனதில் வைத்து அணியை உருவாக்க உள்ளோம். என்றார்.