கோடியக்கரையிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.1 கோடி கஞ்சா மூட்டைகள் பறிமுதல்

*3 மாநிலத்தை சேர்ந்த 9 பேர் கைது

*நாகை தனிப்படை போலீஸ் அதிரடி

நாகை : கோடியக்கரையிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த நாகை தனிப்படை போலீசார், 3 மாநிலத்தை சேர்ந்த 9 பேரை அதிரடியாக கைது செய்தனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் சர்வதேச கடத்தல் கும்பல் கஞ்சா கடத்த இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாகை எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் நாகை, வேதாரண்யம், கோடியக்கரை கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, வேதாரண்யம் புதுப்பள்ளி பாலம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளா மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று செல்ல, அதை பின்தொடர்ந்து ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட கார் வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், 2 கார்களை மடக்கி பிடித்தனர். அப்போது 2 காரில் வந்த 6 நபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், 2 காரிலும் கடும் சோதனை செய்தனர். இதில் ஆந்திரா மாநில காரின் டிக்கியில் சோதனை செய்த போது அதில் மூட்டை, முட்டையாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இரண்டு கார்களில் வந்த 6 நபர்கள் மற்றும் 2 கார்களுடன் கஞ்சா மூட்டைகளையும் தனிப்படை போலீசார் நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காரில் கடத்தி வரப்பட்ட 170 கிலோ கஞ்சாவை இரண்டு, இரண்டு கிலோவாக பிரித்து 85 பொட்டலங்கள் போட்டு கொண்டு வந்ததும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. காரில் வந்தவர்கள் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த அனிஸ் (38), நாகராஜ் (40), கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில்குமார் (30), அக்க்ஷய் (30), உத்தப்பன் (40), சீனு பிரைட் (35) என தெரிய வந்தது. இதுதொடர்பாக 6பேரை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு படகு மூலம் கடத்த உடந்தையாக இருந்த நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த சுதாகர் (30), பிரபாகர் (40), சுந்தர்ராஜன் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்பி ஜவஹர், நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்தார். பின்னர் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து எஸ்பி ஜவஹர் கூறியதாவது: ஆந்திரா மாநிலத்தில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்துவதாக தகவல் வந்தது. தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் சொகுசு காரில் கஞ்சா கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய 2சொகுசு கார், 2பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட 170 கிலோ கஞ்சாவின் மொத்த மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி ஆகும். ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றார்.

Related Stories: