துபாய் : ஐக்கிய அரசு அமீரகத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீதான தாக்குதலால் ஏற்பட்டு இருக்கும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வை சந்தித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏமன் ஹைதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 3 எரிபொருள் டேங்கர்கள் தகர்க்கப்பட்டன. அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் அருகே உள்ள புதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தின. இதில், முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீதான தாக்குதல் தொடரக்கூடும் என எதிரொலியாக நேற்று கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச அளவை எட்டியது. சர்வதேச அளவு கோளாக இருக்கும் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு விழுக்காடு அதிகரித்து 87.22 டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த அமர்வில் இது 86.48 டாலராக இருந்தது.WTI கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.3% விலை அதிகரித்து 84.89 டாலராக காணப்பட்டது. இந்திய சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு நேற்று 89 ரூபாய் அதிகரித்து ரூ.6,350க்கு வர்த்தகமானது. இது கடந்த அமர்வில் ரூ.6,261 ஆக இருந்தது. ஹைதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி கூட்டுப் படைகளுக்கும் இடையேயான மோதல் போக்கு கச்சா எண்ணெயின் சர்வதேச விலையில் தாக்கத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.இதனிடையே சர்வதேச சந்தையில் இன்றும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1%க்கும் மேல் அதிகரித்து இருக்கிறது.