×

நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் தங்கை கணவர், நண்பர் வீடுகளில் போலீஸ் ரெய்டு

திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகை பலாத்கார வழக்கில், நடிகர் திலீப்பின் தங்கையின் கணவர் வீடு, நண்பர் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பிரபல நடிகை பலாத்கார வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது மற்றும் பலாத்கார காட்சிகள் திலீப்பிடம் இருப்பதாக வெளியான தகவல் குறித்த விசாரணையை குற்றப்பிரிவு போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் மாலை ஆலுவாவில் உள்ள திலீப்பின் நண்பரும், ஓட்டல் பங்குதாரருமான சரத், கொச்சியில் உள்ள திலீப்பின் தங்கை கணவர் சூரஜ் வீடுகளிலும் குற்றப்பிரிவு எஸ்பி மோகனசந்திரன் தலைமையிலான போலீசார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. நடிகை பலாத்கார காட்சிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்திலும், திலீப் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக கிடைத்த தகவல் அடிப்படையிலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. நடிகை பலாத்கார காட்சிகளின் நகல் மட்டுமே போலீசுக்கு கிடைத்தது. ஒரிஜினல் இதுவரை சிக்கவில்லை. ஒரிஜினல் காட்சி உள்ள செல்போனை தன்னுடைய வக்கீல்களிடம் கொடுத்துள்ளதாக வழக்கின் முக்கிய குற்றவாளி சுனில் குமார் போலீசிடம் கூறியிருந்தார். ஆனால், அதை ஆற்றில் வீசியதாக வக்கீல்கள் கூறினர்.

இந்நிலையில், அந்த செல்போன் திலீப் நண்பர் சரத் அல்லது தங்கை கணவர் சூரஜ் வீட்டில் இருக்கலாம் என்று கருதியே போலீசார் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக விரைவில் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசாரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், திலீப்பின் முன் ஜாமீன் மனு 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை திலீப்பை கைது செய்ய மாட்டோம் என்று போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே திலீப்பின் நண்பர் சரத்தும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் 21ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Tags : Dileep , Actress Rape Case Actor Dileep's Husband, Police raid on friend's house
× RELATED நடிகை பலாத்கார வழக்கு நடிகர்...