பழநி: பழநி தைப்பூச திருவிழா தேரோட்டம் பக்தர்களின்றி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பெரிய தேருக்கு பதிலாக பரிவார தெய்வங்கள் செல்லும் சிறிய தேரில் பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்திற்குள்ளேயே தேரோட்டம் நடந்தது. இதையொட்டி வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் வடக்கு கிரிவீதியில் உள்ள பாதவிநாயகர் கோயில் முன்பு பக்தர்கள் வழிபாடு செய்து திரும்பிச் சென்றனர். நேற்று காலை சூரிய வழிபாடு செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் காவடி ஆட்டம், அலகு குத்துதல் போன்றவை செய்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.