பட்டியல், பழங்குடியினர் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தில் 19 மாநிலங்களில் ஒருவர் கூட பயனடையவில்லை

* ஒன்றிய அரசு 4 ஆண்டில் ரூ.4.79 கோடி மட்டுமே செலவு

* பெயரளவே திட்டம் செயல்பட்டது ஆர்டிஐயில் அம்பலம்

மதுரை: பழங்குடியினர் மேம்பாட்டுக்கான தேசிய நிதி உதவி திட்டத்தில் 4 வருடத்தில் வெறும் ரூ.4.79 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. குஜராத்தில் 70 பேர், தமிழகத்தில் வெறும் 5 பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர். 19 மாநிலங்களில் ஒருவரும் பயனடையாத நிலையில் இத்திட்டம் பெயரளவிலேயே செயல்படுத்தப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நலத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்படும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களுக்காக பிரத்யேகமாக இத்திட்டத்தை ஒன்றிய  அரசு செயல்படுத்தி வருகிறது.

சாதிய வன்கொடுமை, பாலியல் சித்ரவதை, படுகொலைகளால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் அளிப்பது, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை, மருத்துவ சிகிச்சைகள், மறுவாழ்வு என இத்திட்டம் அனைவருக்கும் பயனுடையதாகும். மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களால், இத்திட்டத்தின் குறைபாடுகள் அம்பலமாகி இருக்கிறது. இதன்படி, கடந்த 2017-18 நிதியாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை உத்தரபிரதேசம், குஜராத், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் வெறும் 137 பயனாளிகளே பயனடைந்துள்ளனர். மீதம் 19 மாநிலங்களில் ஒருவர்கூட இதனால் பயனடையவில்லை. குஜராத்தில் 70, உத்தரபிரதேசத்தில் 48 என இரு மாநிலங்களில் மட்டுமே பயனாளிகள் அதிகபட்சமாக பயன் பெற்றுள்ளனர். மற்ற 7 மாநிலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை 5, 3, 2, 1 என்கிற  ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மிகக் குறைந்தளவாக இருக்கிறது.

2017-18 முதல் 2020-21 நிதியாண்டுகள் வரையிலான நான்கு ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு நாடு முழுவதும் செலவிட்ட நிதி வெறும் ரூ.4 கோடியே 79 லட்சத்து 95 ஆயிரம் மட்டுமே. இதில் தமிழகத்தில் ரூ.15.25 லட்சத்தை நிவாரணத்தொகையாக 5 பேரே பெற்றுள்ளனர். தமிழகத்தை விட மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடக மாநிலங்களில் இத்திட்டத்தில் பயனடைந்தவர்கள் மிக மிகக்குறைவாகும். குறிப்பாக கர்நாடகா, பஞ்சாபில் தலா ஒரு நபரே இத்திட்டத்தில் பயனடைந்துள்ளார். அதிலும் கர்நாடக மாநில பயனாளிக்கு ரூ.2 லட்சமே நிவாரணம் கிடைத்திருக்கிறது.

ஆர்டிஐ மூலம் தகவல் பெற்ற கார்த்திக் கூறும்போது, ‘‘திட்டத்திற்கான விண்ணப்ப நடைமுறைகள் சிக்கலானதாக, சாமான்யர்களுக்கு சிரமமிக்கதாக இருக்கிறது. ஆட்சியர், கோட்டாட்சியர் அந்தஸ்து அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்ப்பது உட்பட நீண்ட நடைமுறைகளால் மக்கள் அணுகுவதில்லை. நாட்டில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தெரிய வரும் நிலையில், இத்திட்டத்தில் 19 மாநிலங்களில் ஒரு பயனாளியும் இல்லாததும், குஜராத், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பயன்படுத்தி வருவதும் மிகுந்த ஆச்சர்யத்தையும், பாதிக்கப்பட்ட பிற மாநிலத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும் தருகிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்பட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சமூக நலத்துறை இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு சேர்க்கும் விதம் சிறப்பு அதிகாரிகள் குழுவை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: