வாரணாசி: உத்தர பிரதேசதில் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரையில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பிரதமரின் தொகுதியான வாரணாசியில் மார்ச் 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அத்தொகுதி பாஜ செயல் வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் பிரதமர் மோடி, நமோ ஆப் மூலம் நேற்று அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘ஒன்றிய அரசின் நலத்திட்டங்கள் விவசாயிகளை சென்றடையும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். ரசாயனம் இல்லாத இலவச உரம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்க வேண்டும். பாஜவினர் நுண்கொடை பிரசாரத்தை மேற்கொண்டு, கட்சி உறுப்பினர்களிடமும், மற்றவர்களிடமும் இருந்து கட்சிக்கு நிதி திரட்ட வேண்டும்’ என்று மோடி வலியுறுத்தினார்.