சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 2022-24ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே, வரும் 23ம் தேதி ஞாயிறு காலை முதல் மாலை வரை, சென்னை வடபழநியில் நடைபெற இருந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல், வரும் 25ம் தேதி செவ்வாய் அன்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளுக்காக சென்றுள்ள இயக்குனர்கள், ஊரடங்கு காரணமாக மறுநாள் திங்கள் அன்று சென்னை திரும்பும்போது சிரமமாக இருக்கும் என்பதால், தேர்தல் செவ்வாய் அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் தேர்தலில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.