சென்னை: முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வெளியே சுற்றியதாக சென்னை முழுவதும் ஒரே நாளில் 5,666 பேரிடம் ₹11.33 லட்சம் அபராதம் தொகையை போலீசார் வசூலித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் சென்னை மாநகர காவல் எல்லையில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது போலீசார் உதவியுடன் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது.அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து மாநகர போலீசார் ‘சிறப்பு முகக்கசவம் அமலாக்க குழு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்ககெட், கடற்கரை பகுதிகள், கடை வீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்து தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.