இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஆண்டிபட்டியில் புதிய தண்ணீர் தொட்டி அமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் இருக்கும் தண்ணீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் 18 வார்டுகள் உள்ளன. இதில் சக்கம்பட்டி பகுதியில் உள்ள 14வது வார்டு சுப்பிரமணிகோவில் தெரு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது.

இந்த தண்ணீர் தொட்டிக்கான நீர் அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீரை தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தண்ணீர் தொட்டியானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த தண்ணீர் தொட்டி பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த தொட்டி அருகே உள்ள மரத்தின், வேர் தண்ணீர் தொட்டி வழியாக கட்டிடத்தை பிளந்து வந்துள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக இந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாத காரணத்தால் தண்ணீரில் புழு உருவாகி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பேரூராட்சி நிர்வாகத்தினர் விநியோகிக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. எனவே நாங்கள் இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாத காரணத்தால் தண்ணீரில் புழுக்கள் உருவாகியுள்ளன. இதனால் எங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும்’ என்றனர்.

Related Stories: