சூளகிரி: சூளகிரி அருகே இன்று எருது விடும் விழா நடந்தது. இதனை காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிகட்டு போட்டி, எருது விடும் விழாக்கள் நடந்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. இதேபோல் இன்று சூளகிரி அருகேயுள்ள திருமலை கவணி கோட்டாவில் இன்று எருது விடும் விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 9.45 மணியளவில் எருது விடும் விழா தொடங்கியது. இதில் பாத்தகோட்டா, காமந்தோட்டி, பீர்ஜேப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி, சானமாவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த எருது விடும் விழாவில் பங்கேற்றனர். விழாவில் 300 எருதுகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை இளைஞர்கள் பிடிக்க முயன்றனர். இந்த எருது விடும் விழாவை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் ஆரவாரங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர். எழுதாட்டத்தையொட்டி உத்தனப்பள்ளி, சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.