பார்ல் நகரில் முதல் ஒரு நாள் போட்டி; இந்தியா-தென்ஆப்ரிக்கா நாளை மோதல்: ஆடும் லெவனில் யார், யாருக்கு வாய்ப்பு?

பார்ல்: தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த நிலையில் அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகிறது. இதில் முதல் போட்டி நாளை பார்ல் நகரில் நடக்கிறது. ரோகித்சர்மா இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் தலைமையில் இந்தியா களம் காண்கிறது. 2012ம் ஆண்டுக்கு பின் கோஹ்லி, டோனியை தவிர எந்த கேப்டன் கீழும் விளையாடியது கிடையாது. சுமார் 10 ஆண்டுக்கு பின் வேறு ஒருவரின் கீழ் கோஹ்லி ஆட உள்ளார். ஆடும் லெவனில் இடம்பிடிக்கபோவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராகுலுடன் தவான் தொடக்க வீரராக களம் இறங்குகிறார். ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர் இடையே கடும் போட்டி உள்ளது. பந்துவீச்சில் பும்ரா, புவனேஸ்வர்குமார், அஸ்வின், சஹாலுக்கு இடம் கிடைக்கும். தீபக்சாகரும் இடம்பிடிக்கலாம். டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. மறுபுறம் பவுமா தலைமையிலான தென்ஆப்ரிக்க அணியில் டிகாக், மார்க்ரம், மாலன், டேவிட் மில்லர், வான்டெர் டுசன் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.

வேகத்தில், ரபாடா, லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன், சுழலில் மகராஜ், ஷம்சி அசத்த காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்திய உத்தேசஅணி: கே.எல்.ராகுல் (கே), தவான், கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், அஸ்வின், புவனேஸ்வர்குமார், பும்ரா, சஹால், தீபக்சாகர்.

கேப்டன் பதவி

கிடைத்தால் கவுரவமாக கருதுவேன்-பும்ரா இந்திய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா நேற்று அளித்த பேட்டி, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோஹ்லியின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவரது முடிவு சரியா? தவறா? என்று நான் கருத்து கூறமுடியாது. அவரது தலைமையின் கீழ் விளையாடுகையில் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவர் அணியில் ஒரு முக்கிய நபராக எப்போதும் இருப்பார். வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதனை நான் மிகப்பெரிய கவுரவமாக கருதுவேன். எந்தவொரு வீரரும் கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். அதில் நானும் மாறுபட்டவன் கிடையாது, என்றார்.

இதுவரை நேருக்கு நேர்...

இரு அணிகளும் இதுவரை 84 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 35ல் இந்தியாவும், 46ல் தென் ஆப்ரிக்காவும் வென்றுள்ளன. 3 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 10 போட்டியில் 8ல் இந்தியாவே வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்தில் 2019ல் உலக கோப்பையில் மோதிய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. தென்ஆப்ரிக்காவில் இந்தியா இதுவரை 5 ஒருநாள் தொடர்களில் விளையாடி உள்ளது. இதில் 1992ல் 2-5, 2006ல் 0-4, 211ல் 0-2 என தொடரை இந்தியா இழந்துள்ளது. 2018ம் ஆண்டு 5-1 என தொடரை கைப்பற்றி உள்ளது.

பார்ல் மைதானத்தில் இதுவரை....

பார்ல் மைதானத்தில் தென்ஆப்ரிக்கா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6ல் வென்றுள்ளது. ஒரு போட்டியில்( நியூசிலாந்துடன்) தோல்வி கண்டுள்ளது. இந்தியா இங்கு 3 போட்டிகளில் ஆடி உள்ளது. இதில் 1997ல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி டையில் முடிந்துள்ளது. 2001ல் கென்யா, 2003 உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராகவும் வென்றுள்ளது. இங்கு முதன்முறையாக தென்ஆப்ரிக்காவுடன் இந்தியா மோத உள்ளது.

Related Stories: