×

விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்; முதல்வர் உத்தரவு

சென்னை: விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மாற்றுத்திறனாளி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த குமார், கடந்த நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள மளிகை கடை உரிமையாளர் வீட்டில் தங்க நகைகளை திருடியதற்காக அண்மையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய மாற்றுத்திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சா ஆகியோர் சேந்தமங்கலம் காவல் துறையினரால் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டு, நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி மாற்றுத்திறனாளி பிரபாகரன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில், அவர் சிகிச்சைக்காக உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை நரம்பியல் துறையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு 11.40 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, சேலம் சரக டிஐஜி (பொறுப்பு) சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவரையும், தலைமை காவலர் ஒருவரையும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன் குடும்பத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், உத்தரவிட்டுள்ளார். மேலும், மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்தது குறித்த வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வு துறைக்கு (சிபிசிஐடி) மாற்றிடவும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : CPCID , Transfer to CBCID: Rs 10 lakh relief to family of deceased; Chief Order
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...