ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டு கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 1974ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞரால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. தாட்கோவின் கட்டுமான பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாய கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமான பணிகளும், மேம்பாட்டு பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக உ.மதிவாணனை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17ம் தேதி) உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உ.மதிவாணன், வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 2001 வரை திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும், 2006 முதல் 2011 வரை திருவாரூர் எம்எல்ஏவாகவும், தமிழக பால்வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்த நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார். மேலும், கடந்த 2016 முதல் 2021 வரை கீழ்வேளுர் எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் கீழ்வேளுர் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார்.

Related Stories: