மாவட்ட குழந்தைகள் அலகில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 2 பாதுகாப்பு அலுவலர்கள், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், 2 சமூகப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் கணக்காளர், தரவு பகுப்பாளர், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர், 2 புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.

முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் உரிய கல்வித்தகுதி மற்றும் குழந்தைகள் சார்ந்த அனுபவம் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனநல மருத்துவம், கல்வி அல்லது மனித மேம்பாடு, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சுகாதாரம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். கணினி தொழில்நுட்ப பணியிடங்களுக்கு தட்டச்சு சான்றிதழ், கணினி தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது செங்கல்பட்டு மாவட்ட இணையதளமான chenglupattu.nic.in -ல் இருந்து பதிவிறக்கம் செய்து, ஜன.31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 317, கேடிஎஸ் மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் என்ற முகவரியிலும், 044-27234950 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: