பாட்னா: உங்கள் வரம்புக்குள் இருங்கள் மீறினால் 76 லட்சம் பாஜ தொண்டர்கள் தகுந்த பதிலடி தருவார்கள் என்று பீகார் முதல்வர் நிதிஷுக்கு பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் இடையேயான மோதல் வலுத்து வருகின்றது. கூட்டணி இருந்தபோதிலும் முதல்வர் நிதிஷ்குமாரை பாஜவினர் அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் உபேந்திரா குஷ்வாகா ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதில் அசோக மன்னர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நாடக ஆசிரியர் தயா பிரகாஷ் சின்காவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இதனிடையே தயா பிரகாஷ் சின்கா மீது பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால் வழக்கு பதிவு செய்துள்ளார்.