பம்பையில் இருந்து சன்னிதானம் வரை அங்கப்பிரதட்சணமாக சென்ற சென்னை பக்தர்

திருவனந்தபுரம்: பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நீலிமலை, சுப்பிரமணிய பாதை என்று 2 பாதைகள் உள்ளன. 5 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் உள்ள இந்த பாதைகள் மிகவும் கடினமான பாதைகளாகும். குறிப்பாக நீலிமலை பாதை பல இடங்களில் செங்குத்தாக இருக்கும். நல்ல திடகாத்திரமாக உள்ளவர்களால் மட்டுமே மலையேறி செல்ல முடியும். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்ற பக்தர் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு அங்கப்பிரதட்சணம் செய்து சென்றார். தன்னுடைய மகனுடன் 2 நாட்களுக்கு முன் சபரிமலைக்கு வந்தவர், பம்பையிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்தபடி சன்னிதானத்தை நோக்கி சென்றார். அவருக்கு பின்னால் ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியபடி சென்றனர். நேற்று முன்தினம் இரவு  மரக்கூட்டம் பகுதியில் தங்கிய அனந்தபத்மநாபன் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு சன்னிதானத்தை அடைந்தார். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பினார். சபரிமலை சன்னிதானத்திற்கு ஒரு பக்தர் அங்கப்பிரதட்சணம் செய்தபடி வருவது மிகவும் அபூர்வமான சம்பவமாகும் என்று  சபரிமலை கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: