ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு சிறுமி கட்டாய திருமணம் பெற்றோர் உட்பட 5 பேர் கைது

ஈரோடு: ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (28). டெய்லர். வாய் பேச முடியாத, காது கோளாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி ஆகியோர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் பணம், நகை ஆசை காட்டிசம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் சிறுமிக்கும், மாரிமுத்துக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, சிறு வயது திருமணம் குறித்து அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தி, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர். இதற்கு உறுதுணையாக இருந்ததாக அவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: