105வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் கட்சி தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அதிமுக கொடியினை ஏற்றி வைத்து, அங்கே கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பேராசிரியர் சா.கலைப்புனிதன் எழுதிய ‘புரட்சி தலைவரின் அறமும், அரசியலும்’ என்ற நூலை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, மற்ற மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தங்களது மாவட்டங்களில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Related Stories: