பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய மாஜி ராணுவ வீரர் சிறையில் அடைப்பு

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர்(56), முன்னாள் ராணுவ வீரர். தற்போது வீட்டில் அரிசி மாவு அரைக்கும் இயந்திரம் வைத்துள்ளார். இவரது மனைவி ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் சேகர் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயதான 12ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர் நேற்று அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தனர்.

இதில் சேகர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் சேகரின் வீட்டிற்கு சென்று கேட்டனர். அதற்கு சேகர் கர்ப்பத்தை அழிக்குமாறு மிரட்டியதோடு, ₹10 லட்சம் தருவதாக பேரம் பேசினாராம். இதனால், மேலும் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மாணவியை கர்ப்பமாக்கிய சேகரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: