தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத் தலைவராக உ.மதிவாணன் நியமனம்

சென்னை : சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மேம்பாட்டுப் பிரிவால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ.மதிவாணனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17-1-2022) ஆணையிட்டுள்ளார். உ.மதிவாணன் பி.ஏ.,பி.எல்., பட்டம் பெற்ற வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 2001 வரை திருவாரூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், 2006 முதல் 2011 வரை திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் மற்றும் தமிழக பால்வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்த நீண்ட அனுபவம் கொண்டவர் ஆவார்.

மேலும், கடந்த 2016 முதல் 2021 வரை கீழ்வேளுர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் கீழ்வேளுர் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: