×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து செய்தால் மணமும், சுவையும் சிறப்பாக இருக்கும்.

* உப்புமா, பாயசம் ஆகியவற்றிற்கு ஜவ்வரிசி வேகும்போது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வெறும் வாணலியில் லேசாக வறுத்து விட்டுச் செய்யலாம். வேகும்போது சிறிது நெய் அல்லது டால்டா சேர்த்தால் ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும். சுவையாகவும் இருக்கும்.

* வடாமுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துக் கலந்து செய்தால் வடாம் தனி ருசியோடு இருக்கும் -ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* ரவையுடன் ஒரு பங்கு கோதுமை மாவும், இரண்டு பங்கு அரிசி மாவையும் சேர்த்து செய்தால் ரவா தோசை முறுகலாக வரும்.

* எலுமிச்சம் பழங்களை ஊசியால் அங்கங்கே குத்தி உப்பில் போட்டு வைத்தால், தேவைப்படும்போது எடுத்து, காரம் சேர்த்து ஊறுகாய் போட்டுக் கொள்ளலாம்.
-அமுதா அசோக்ராஜா, திருச்சி.

* கிரேவி செய்யும்போது, இறக்கி வைக்கும் முன்பு, சிறிது சர்க்கரை சேர்த்தால் சுவை கூடும்.

* உருளைக்கிழங்கை 1/2 மணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, பிறகு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
- எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.

* சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது பனைவெல்லத்தை காய்த்து அதில் சேர்த்து மாவு பிசைந்து சாப்பிட்டால் தனி டேஸ்ட்டாக இருக்கும்.

* சமையல் அறையில் இருக்கும் கத்தரிக்கோலை சானைப்பிடிக்க ஈஸியான வழி கல் உப்பு ஜாடிக்குள்ளே சொருகி சிறிது நேரம் கத்தரித்தால் உப்பால் சானை ஏறிவிடும்.
-பி.கவிதா, சிதம்பரம்.

* எந்த வகைப் பாயசம் செய்யும்போதும் ஏலக்காய்ப் பொடியைக் கடைசியாக சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் சேர்த்தால் வாசனை ஊரையே தூக்கும்.

* உளுத்தம் கொழுக்கட்டை செய்யும்போது, தேங்காய் எண்ணெயில் தாளித்தால் கொழுக்கட்டை தேங்காய் எண்ணெய் வாசனையோடு கமகமக்கும்.

* கூட்டு, பொரியலுக்கு தேங்காயை சேர்க்கும் போது, அப்படியே போடாமல் சிறிது வதக்கி சேர்த்தால் கூட்டும், பொரியலும் கூடுதல் வாசனையாக இருக்கும்.
-கவிதா பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

* புழங்கல் அரிசி களையும் போது, இரண்டாவது கழுநீரை சமையலில் பயன்படுத்தலாம். இதில் விட்டமின் B-6, B-12 இருக்கிறது. இதில் புளியை ஊற வைக்கலாம். காய்களை வேக விடலாம்.

* வறுத்த புழுங்கலரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால் கூட்டு கறி இறக்கும்போது லேசாகத் தூவலாம். நல்ல வாசனையுடன் இருக்கும்.
* ஒரு கைப்பிடி பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்து இட்லி மாவுடன் கலந்து தோசையாக வார்க்கவும். கல்லில் ஒட்டாமல் எண்ணெய் குடிக்காமல் அருமையான பேப்பர் ரோஸ்ட் சுலபமாக வரும்.
- எஸ். சுமதி, கரூர்.
* பாத்திரங்களில் கறை படிந்தால் அதனை
எலுமிச்சை பழச்சாறும், உப்பு கலந்த நீரில் முதலில் தேய்த்துவிட்டு பின்பு சபீனா அல்லது ஏதேனும் ஒரு சோப்பினால் தேய்த்தால், கறை போயே போய்விடும்.

* சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சன்னா மசாலா, தால் போன்றவை செய்யும்போது அதில் இறக்கும் தருணத்தில் ஒரு ஸ்பூன் கார்ன்ஃபிளவர் (சோள மாவு) கரைத்து விட்டால் சுவை அதிகமாக இருக்கும்.

* உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, முதலில் வெங்காயத்தை மெல்லிய நீளத்துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து மேலே தூவினால் காரக்கறி அருமையாக இருக்கும்.
- சீதா ரவி, சென்னை.

* உளுந்து மாவில் வடை செய்யும்போது முட்டைக்கோஸைப் பொடியாக சேர்த்து செய்து பாருங்களேன் வாசனை, சுவை இரண்டுமே ஆளை அசத்தும்.

* தேங்காய் சாப்பிட முடியாதவர்கள், புழுங்கலரிசி - 1/2 கப், உடைத்த கடலை - 1/2 கப், கசகசா - 2 ஸ்பூன் எடுத்து, தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து (எண்ணெய் வேண்டாம்) பொடித்து வைத்துக்கொண்டு கூட்டு, பொரியல், வற்றல் குழம்பு செய்யும்போது போடலாம். நல்ல வாசனையுடனும், சுவையுடனும் இருக்கும்.
-கே.சாந்தி, சென்னை.

* கருணைக்கிழங்கு காரல் தன்மை குறைய அத்துடன் எலுமிச்சை அல்லது நாரத்தை இலைகள் நான்கு சேர்த்து வேக விடவும்.

* மூலச்சூடு உள்ளவர்கள் தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளை வெங்காயம் வதக்கி சாப்பிட்டாலும் நல்லது.
-கே.சாயிஹாதன், சென்னை.

* பூண்டு சாறையும் எலுமிச்சைச் சாறையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் காணாமல் போகும்.

- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

அஜீரணத்தை குணமாக்கும் வெந்தயத் துவையல்

வயிற்றுக்கடுப்பு மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவில் வெந்தயத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேவையானவை

வெந்தயம் - 100 கிராம்
மிளகாய் - 10
புளி - நெல்லிக்காயளவு
வெல்லம் - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு.

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி வெந்தயத்தைப் போட்டு லேசாக வறுக்கவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகாயையும் எண்ணெயில் போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். அம்மியில் வெந்தயத்துடன், ஊறவைத்த புளி, தேவையான அளவு உப்பு, மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும். கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து அரைக்கவும். வெந்தயத் துவையலை சூடான சாதத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!