உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு கட்சித் தாவல் அதிகரித்துள்ளது. ஆளும் பாஜ.வில் இருந்து இதுவரையில் 3 அமைச்சர்கள், 5 எம்எல்ஏ.க்கள் சமாஜ்வாடிக்கு தாவியுள்ளனர். இந்நிலையில், பாஜ.வும் அக்கட்சியை சேர்ந்தவர்களை தனது கட்சிக்கு இழுத்து வருகிறது. அந்த வகையில், சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதிக் யாதவின் மனைவியும், முலாயமின் இளைய மருமகளுமான அபர்ணா யாதவ் பாஜ.வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்டு தோற்றார். எனினும், சமீப நாட்களாக இவர் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.11 லட்சம் நன்கொடை வழங்கியதோடு, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தார். இவர் பாஜ.வில் இணைந்தால் அது கட்சிக்கு வலுசேர்க்கும் என்று கருதப்படுகிறது.