மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி மேலாளர் உட்பட 12 பேருக்கு கொரோனா : மாஸ்க் அணியவில்லை என குற்றச்சாட்டு

சென்னை : நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே போல், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காட்டுத் தீப்போல் பரவி வருகிறது. தொற்றை, தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிகை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையம், கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க, பஸ்களில் 75 சதவீத பயணம், தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு, அதேப்போல் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதி மேலாளர் கார்த்திகேயனுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் மருத்துவ குழுவினருடன் சென்று 78 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

அதில், 11 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. பின்னர், பேரூராட்சி ஊழியர்கள் வளாகம் முழுவதும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்தனர். அரசு ஊழியர்கள் மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபட்டதே கொரோனா பரவலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

Related Stories: