சென்னை : தமிழகத்தில் நேற்று 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நேற்று இரண்டாவது வாரமாக கடைப்பிடிக்கப்பட்டது.
எனினும் கொரோனா தொற்றின் வேகம் குறைந்தபாடில்லை. அதன்படி நேற்று 23,975 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,40,720 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23,975 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு 1,42,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 12,484 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 27,60,458 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 11 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்தனர். அதன்படி இதுவரை 36,989 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அதிகபட்சமாக நேற்று சென்னையில் 8,987 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று 241 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.