அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை விடுமுறை :தேர்வுகளும் ஒத்திவைப்பு; தமிழக அரசு அறிவிப்பு

* 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 17ம் தேதி தமிழ் தேர்வு தொடங்கி 24ல் அனைத்து தேர்வுகளும் முடியும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

* தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளதால், தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஏற்கனவே 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை : கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி வரை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், 19ம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை  முடிவெடுத்தது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டன.

 எனினும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், பொதுத் தேர்வு உள்ள வகுப்புகள் என்பதாலும் செப்டம்பர் மாதம் முதல் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின்போது 10 நாட்கள் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. எனினும் அந்தவிடுமுறை காலத்தை சரிகட்டும் வகையில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது ஒமிக்ரான் தொற்று தீவிரம் அடையத் தொடங்கியதால், பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பொங்கலுக்கு பிறகு 19ம் தேதி முதல் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வு போல தேர்வுத்துறையின் சார்பில் பொதுக் கேள்வித்தாள்கள் அச்சிடும் பணியும் நடந்து வருகிறது. திருப்புதல் தேர்வு எழுத வசதியாக மாணவ மாணவியர் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திவருகின்றனர். அவர்களின் விடைத்தாளை வேறு பள்ளி மையத்தில் வைத்துதான் திருத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியது. இதனால், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கண்டிப்பாக ெதாடர்ச்சியாக வகுப்புகள், திருப்புதல் தேர்வுகள் நடக்கும் என்று ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர் நினைத்திருந்தனர். அதற்கு ஏற்றார்போல மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வந்தனர்.

 இந்நிலையில், யாருமே எதிர்பாராத  வகையில் கடந்த 2 வாரங்களாக 600 முதல் 700 வரை கட்டுக்குள் இருந்த கொரோனா  எண்ணிக்கை திடீரென மின்னல் வேகத்தில் தமிழகம் முழுவதும் பரவத் தொடங்கியது.  இதனால், ெதாற்று சங்கலியை உடைக்கும் வகையில், இரவு 10 மணி முதல் காலை 5 மணி  வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும், கொரோனா தொற்று  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதையடுத்து தமிழக அரசு  ஞாயிறு அன்று முழு ஊரடங்கை அறிவித்தது. ேநற்று 2வது முழு நேர ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டது. எனினும் கொரோனா தொற்று  எண்ணிக்கை 23 ஆயிரத்தை  கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று சங்கலியை உடைக்கும் வகையிலும், மாணவர்கள் பாதிப்பை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:

 கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ம் தேதி வரை 10,11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதையடுத்து, வருகின்ற 19ம் தேதி அன்று தொடங்கி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டு,  வகுப்புகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், 10, பிளஸ் 1, பிளஸ் 2  வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை  ஏற்பாடு செய்துள்ளது. தேர்வு அறிவிக்கும் நாள் வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம்  தான் வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: