வாகன சோதனையில் ஈடுபட்டபோது ரோந்து வாகனம் மீது பஸ் மோதி விபத்து

*2 போலீசார் காயம்

அண்ணாநகர் : நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று காலை கோயம்பேடு போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோயம்பேட்டில் இருந்து அவ்வழியே வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த ரோந்து வாகனம் மீது மோதியது. இதில், ரோந்து வாகனத்தின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.

மேலும், அருகில் பணியில் இருந்த போக்குவரத்து எஸ்.ஐ ஆனந்தன் (56), போக்குவரத்து காவலர் தண்டபாணி (38) ஆகிய இருவரும் காயமடைந்தனர். சக போலீசார் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர், வேலூர், காட்பாடியை சேர்ந்த ஜெயக்குமார் (51), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: