சென்னை : தமிழக அரசின் 2022ம் ஆண்டிற்கான ‘திருவள்ளுவர் விருது’ மு.மீனாட்சி சுந்தரம், 2021ம் ஆண்டிற்கான ‘காமராஜர் விருது’ குமரிஅனந்தன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களுர் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், 2009ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவரும் பெங்களுர் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பெங்களுரில் வசிக்கும் திருச்சியை சார்ந்த மு.மீனாட்சி சுந்தரத்துக்கு (வயது 78) தமிழ்நாடு அரசு, 2022ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.
அதேபோன்று, பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், முனைவர் குமரி அனந்தனுக்கு (வயது 88) தமிழ்நாடு அரசு, 2021ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருதினை வழங்குகிறது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இந்த விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படவுள்ளது.