வண்டலூர் : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. பூங்காவில் பணி புரியும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 23,989 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், 11 பேர் உயிரிழந்தனர். ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 241 ஆக உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்களில் பணிபுரிவோர் கொத்து கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 350 ஊழியர்களுக்கு கடந்த புதன் கிழமை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளிவந்த முடிவுகளில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது.பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து தனிமைபடுத்தி வருகின்றனர். 70 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் உயிரியல் பூங்கா நாளை முதல் முடப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.17.01.2022 முதல் 31.01.2022 வரை உயிரியல் பூங்கா மூடப்படும் என்றும் பின்னர் தொற்று பரவல் சூழ்நிலை பொறுத்தே பூங்கா திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.