குதிரைப்பந்தய மைதானத்தில் இளம்புயல்!

நன்றி குங்குமம் தோழி

720 குதிரைப் பந்தயம், 7 சாம்பியன்ஷிப் கோப்பைகள் வென்று சாதனை படைத்துள்ள அவரது பெயர் ரூபா சிங். இவர் தான் இந்தியாவின் முதல் குதிரைப்பந்தய தொழில் முறை நடத்துனர். அதை விட எளிமையாக சொல்லவேண்டும் என்றால் குதிரை ஜாக்கி. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு செல்பவர்கள் இவரை நிச்சயம் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். சென்னை வேளச்சேரியை சேர்ந்த இவரது பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம். 38 வயதாகும் அந்த பெண் தலையில் ஹெல்மேட் பேண்ட், சாட்டை, பூட்ஸ் சகிதமாக கையில் ஸ்டிக்கை வைத்திருந்தார். அங்கு தயாராக நின்றிருந்த குதிரை மீது லாவகமாக துள்ளிக்குதித்து ஏறுகிறார். பின்னர் குதிரை வேகமெடுக்கிறது. இலக்கை குறிவைத்து செல்லும் ரூபாவின் குதிரை சில நொடிகளில் வெற்றி இலக்கை எட்டுகிறது.

அந்த குதிரை மீது பணம் கட்டியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

‘‘7 வயது முதலே குதிரைகள் மற்றும் குதிரைப் பந்தயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். இதற்கு எனது தாத்தா உகம் சிங் தான் காரணம். என்னுடைய தாத்தா இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது ராணுவ குதிரைகளைப் பராமரிக்கும் பணியிலிருந்தார். தந்தை நர்பத், சகோதரன் ரவீந்தர் இருவரும் குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் ஜாக்கியாக உள்ளனர். சிறு வயதில் நான் தாத்தாவுடன் செல்லும்போது குதிரைகள் எனக்குப் பழக்கமானது. குதிரைப் பந்தயம் மீதும் காதல் ஏற்பட்டது. நான் ஜாக்கியாக பணிபுரிவதை சிலர் விமர்சனம் செய்தனர். ‘நண்பர்கள், உறவினர்கள் மட்டுமல்ல, ரேஸ்கோர்ஸில் பணிபுரிபவர்களும் கூட என் தந்தையிடம் பெண்ணை ஏன் இந்த ஆபத்தான பணிக்கு அனுப்புகிறீர்கள் என கேட்டனர். அவர் அதற்கு தக்க பதிலடி கொடுத்துவிடுவார். பிறகு இதுபற்றி யாரும் பேசுவதே இல்லை. நான் இந்தியாவில் முதல் ஜாக்கி என்பதில் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது.

இந்தியாவின் சார்பாக குதிரை ஜாக்கியாக ஊட்டி, மைசூர் மற்றும் பல வெளிநாடுகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். இலங்கை, அரபு நாடுகள், போலந்து, ஜெர்மனியில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளேன். ஐரோப்பிய நாடுகளில் குதிரைப் பந்தயம் மற்றும் குதிரையேற்றம் போன்றவற்றில் பெண்களும் இயல்பாக பங்கேற்கின்றனர். தற்போது குதிரைகள், ஜாக்கிகளுக்கு பயிற்சியாளராக புரமோஷன் பெற்றுள்ளேன் ‘ஜான்சி ராணி லக்ஷ்மிபாய், ராணி மங்கம்மா ஆகியோர் தான் எனது ரோல்மாடல். குதிரைப் பந்தயத்தை விளையாட்டாக அங்கீகரித்து, ஜாக்கியாக, பயிற்சியாளராக பணிபுரியும் பெண்களுக்கு அரசு  அங்கீகாரம் வழங்கவேண்டும்’’ என்றார் ரூபா சிங். இவரின் வாழ்க்கை குறித்து படம் ஒன்று இயக்க இருக்கும் நிலையில் அதில் நடிகை டாப்சி இவரின் கதாப்பாத்திரம் ஏற்று நடிக்க இருக்கிறார்.           

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: