என்னை திருமணம் செய்ய விருப்பமா?

நன்றி குங்குமம் தோழி

ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஆண்களுக்கு மனதில் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும். அந்த சிக்னல் தான் அவள் என்னவள் என்று இவர்கள் மனதில் ஒரு உறுதியை ஏற்படுத்தும். அதன் பின் இவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் தெரிந்ததுதான். தன் காதலி செல்லும் இடத்துக்கு எல்லாம் செல்வது. அவள் இவர்களை கவனிப்பது போல் அவள் கண் முன் தென்படுவது... அவள் தன்னை திரும்பி பார்க்கிறாளா என்று கவனிப்பது... இப்படியாக தான் அவர்கள் தன் காதல் ஹார்மோனை அந்த பெண்ணுடைய மனதுக்குள் பதிய வைப்பார்கள். அந்த பெண்ணுக்கும் விருப்பம் இருந்தால் அவளும் இவர்கள் செய்யும் சேட்டைகளை ரசிப்பாள் இல்லை என்றால் திரும்பிக்கூட பார்க்கமாட்டாள்.

அவளிடம் இருந்து பச்சை விளக்கு எறிய ஆரம்பித்ததும்... இவர்கள் அதனை உறுதிப்படுத்த காதல் பரிசாக ரோஜா மலர்கள் கொண்ட பூங்கொத்து, காதல் கடிதம், சாக்லெட், டெட்டி கரடி பொம்மைன்னு கொடுப்பது வழக்கம். சிலர் அவளுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால் இதை எல்லாம் ஓரம்கட்டி, தன் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். காதலர் தினம் என அழைக்கப்படும் பிப்ரவரி 14ம் தேதிக்கு முந்தைய நாளில் ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் வித்தியாசமாக தனது காதலை, காதலியிடம் தெரிவித்தார். விவசாயியான அந்த இளைஞர் பெயர் ஸ்டீபன் ஸ்வார்ஸ். அவர் செய்த செயலை உலகமே பார்த்து மகிழ்ந்தது. விவசாயி என்பதால், தன் காதலையும் பசுமையாக வெளிப்படுத்தி இருந்தார் ஸ்டீபன்.

தனது மக்காச்சோள தோட்டத்தில் என்னை திருமணம் செய்ய விருப்பமா?’ என்ற வாசகத்தை மக்காச்சோள செடி இலைகளை கொண்டு உருவாக்கியிருந்தார். பின்னர் தனது காதலியிடம் ஒரு ஆளில்லா குட்டி விமானத்தை (டிரோன்) கொடுத்து தனது வயலில் ஊடுருவியுள்ள காட்டுப்பன்றிகளை பார்வையிடுமாறு கொடுத்தார். டிரோன் மூலம் காட்டுப்பன்றிகளை வேவு பார்த்தவரின் கண்களில் ஸ்டீபன் எழுதி இருந்த வாசகம் தென்பட்டது. அதைப் பார்த்து உற்சாகமான காதலி உடனே ஸ்டீபனின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இதனை சேட்டிலைட் மூலம் படம் பிடித்த கூகுள் நிறுவனம் உலகமே பார்க்கும்படி பதிவிட்டது. போதாக்குறைக்கு கனடாவில் உள்ள ஸ்டீபனின் அத்தையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டதை அவருக்கு கைபேசியில் படம் பிடித்து அனுப்பியுள்ளார். அதன் பிறகு தான் தனது காதல் புரொபோசலை உலகமே பார்த்த விஷயம் ஸ்டீபனுக்கு தெரிந்தது. இப்போது இந்த காதல் ஜோடிகள் சோளக்காட்டுக்குள் சந்தோஷமாக காதல் கீதம் பாடி வருகின்றனர்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: