×

செல்ஃப் கான்ஃபிடென்ட்டுக்காக ‘டிக்-டாக்’ செய்யலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘பூர்வீகம் ஆந்திராவாக இருந்தாலும், பிறந்து வளர்ந்து பள்ளி-கல்லூரி எல்லாம் இங்கு சென்னைதான். ஐந்து வயதிலிருந்தே நடனமாடி வருகிறேன்.  கதக் கத்திருக்கிறேன். படிக்கும் போதே பல்வேறு மேடை நாடகங்கள், நடனத்திற்காக நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இந்த ஊக்குவிப்பு  தானாகவே என்னை நடிப்பில் தள்ளியது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே நடிப்பில் ஆர்வம் உள்ளதை வீட்டில் சொன்னேன். அவங்க +2 முடி  அதன் பிறகு பார்க்கலாம்ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. பரீட்சையும் முடிஞ்சது. அந்த நேரத்தில் தியேட்டர் செய்யலாம்ன்னு எண்ணம் ஏற்பட்டது.  அந்த சமயத்தில் “மகளிர் மட்டும்” திரைப்படத்தில், சரண்யா மேம் சின்ன வயது கதாபாத்திரத்திற்கு நடிக்க வாய்ப்பு வந்தது. ஆடிஷனுக்கு  கூப்பிட்டாங்க. போனேன், தேர்வும் ஆனேன்.

இதை பார்த்துதான், ஹலிதா மேடம் இயக்கும் “சில்லு கருப்பட்டி” படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. இதைத் தவிர தெலுங்கில் “ஹலோ”ன்னு  ஒரு படம் பண்ணி இருக்கேன். தற்போது, ‘2டி’ தயாரிப்பில், ஜோதிகா மேம் படம் நடிச்சுட்டு இருக்கேன்”  என்று தனது அறிமுகத்தை சுருக்கமாக  முடித்துக் கொண்ட  நிவேதிதா, எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை என்பதை கூறினார். ‘‘முன்பெல்லாம் ஹீரோ-ஹீரோயினு இருந்தது.  ஆனால், தற்போது நல்ல கதை, கதாபாத்திரம் கொண்டு தான் படத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சின்ன பட்ஜெட்டோ, பெரிய  பட்ஜெட்டோ எதுவாக இருந்தாலும் கதையின் கண்டென்ட் தான் முக்கியம். படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரும் கதாபாத்திரங்கள் தான். அவர்களின்  திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

எனக்கு ஒரு படம் முடியும் முன்பே அடுத்த படத்துக்கு கமிட் ஆகணும்ன்னு எண்ணம் இல்லை. காரணம் ‘மகளிர் மட்டும்’ நடித்த பின் நிறைய பட  வாய்ப்புகள் வந்தது. 60 வயது ஆன போதும், வாழ்க்கையிலேயே 20 படங்கள் நடித்திருந்தாலும் அது நல்ல படங்களா நடிக்கணும். இன்றைய  தலைமுறையான நாம் சினிமாவை டிஜிட்டலில் பார்க்கிறோம். அதனால் வாய்ப்புகள் ஏராளம். எல்லா நடிகர்களுக்கும் ஜனரஞ்சக படங்கள் மீது ஆசை  இருக்கும். அது எனக்கும் இருக்கிறது. பிரபல இயக்குநர்களோடு வேலை பார்க்கணும். மக்கள் மனதில் ஆழமாக நிலைத்து நிற்கக்கூடிய படங்களில்   நடிக்கணும்... இப்படி நிறைய ஆசை இருக்கு. அது எல்லாம் சரியா அமையணும்” என்று கூறும் நிவேதிதா, தான் நடித்த பட அனுபவங்கள், நடிப்பிற்காக  தன்னை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறார் என்பது பற்றி பேசினார்.

‘‘ஒவ்வொரு படமும் ஒவ்வொரு  மாதிரி அமையும். அது அந்த படக்குழுவை பொருத்து மாறுபடும். நான் இயக்குநரின் நடிகை. சில படங்களுக்கு  நிறைய, சில படங்களுக்கு குறைவாக பயிற்சி தேவைப்படும். ஏன் சில படங்களில் ஷூட்டிங் ஸ்பாட் போன பிறகு தான் என்ன மாதிரியான  ரோல்ன்னே தெரியும். நடிப்பை தாண்டி எவ்வளவுக்கு எவ்வளவு இயல்பாக அந்த கதாபாத்திரத்தில் பொருந்துகிறோம் என்பதுதான் டாஸ்க்கே. என்னை  பொறுத்த வரை பயங்கரமாக நடிப்பதை விட, நாம் நாமாக கேமரா முன் தோன்றுவது ரொம்பவே கஷ்டம்.  

பயிற்சி தேவையா, தேவையில்லையா என்பதெல்லாம்  இயக்குநரை பொறுத்தது. ஒரு நடிகர் எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கும்படி இருக்க  வேண்டும். எந்த நிலைக்கும் மோல்டாவதற்கு தயாராக இருக்கணும். அவங்களுக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொள்வேன்”  என்று கூறும் நிவேதிதாவிற்கு, நடிப்பு, நடனம், ஓவியம், கவிதை படிப்பது, எழுதுவது என்றால் உயிராம். “நான் ஒரு கலா ரசிகர். சின்ன  வயதிலிருந்தே எதையாவது வரைந்து கொண்டு இருப்பேன். அம்மா நல்லா வரைவாங்க. அது தான் எனக்கும் அதன் மேல் ஒரு ஈடுபாடு ஏற்பட  காரணம்ன்னு சொல்லலாம். இதற்காக நான் எந்த ஒரு சிறப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை. பென்சில் ஸ்கெட்ச், போட்ரேட், லைனிங்  எல்லாம் வரைவேன். பாகுபலி படம் பார்த்துட்டு, அந்த மாளிகையை அப்படியே வரைந்தேன். இன்டீரியர் செய்யவும் பிடிக்கும்.  

பெரிய பெரிய நாவல் படிப்பதில் ஆர்வமில்லையென்றாலும், நிறைய சிறுகதைகள், கவிதைகள் ரொம்ப பிடிக்கும். பள்ளியில் படிக்கும் காலத்தில்  இருந்து இப்போது வரை இந்த பழக்கத்தை நான் விடவில்லை. அதனால் தான் என்னவோ தற்போது நிறைய கவிதைகள் ஆங்கிலத்தில் எழுதி  வருகிறேன். என்னுடைய மனதிருப்திக்காக இதெல்லாம் எழுதுகிறேன் என்றாலும், ஒரு நாள் என் மனதில் தோன்றுவதை ஓவியமாகவோ அல்லது  கவிதை மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தற்போதுள்ள இளைய தலைமுறையினரிடம், இன்செக்கியூர் அதிகமா  உணர்கிறார்கள். அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும். பெரிய, பெரிய விஷயங்கள் சொல்வதற்கெல்லாம் நிறைய பேர் இருக்காங்க. ஆனால்,  சின்னச் சின்ன விஷயங்கள் பேசுவதற்குதான் ஆட்கள் கிடையாது. அதுதான் முக்கியமானதாக பார்க்கிறேன்.

இது போன்று சின்னச் சின்ன விஷயங்கள் பேசுவது உதவி தான் என்று தோன்றியிருக்கு. இது மாதிரியான விஷயங்களை சமூக வலைத்தளங்களில்  எழுதி வருகிறேன். நிறைய பேர் அவர்களை சுற்றியுள்ள வெறும் பிரச்சினைகளை மட்டுமே பார்க்கிறார்கள். அதையும் தாண்டி நிறைய ப்ளஸ் இருக்கு.  அது வெளியில் பெருசா தெரிவதில்லை. அதை சரியான முறையில் பயன்படுத்தினா எல்லாரும் சிறந்தவர்களாக வருவாங்க. எல்லோருக்கும் ஒரு  பிளார்ட்ஃபார்ம் இருக்கு. சமூகவலைத்தளம் அதற்கான சாத்தியக் கூறுகளை அமைத்து தருகிறது. சர்வதேச அளவில் பல விஷயங்கள் செய்யலாம்.  ஆனால், அதை தவறாக பயன்படுத்துவோர் சதவீதம்தான் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் தேவையில்லாமல், தங்களது நம்பிக்கை உடையும்  படியான பதிவுகளை வெளிப்படுத்துகிறார்கள்.

அடுத்தவர்களை பார்க்காமல், உங்களை பாருங்கள். சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் போடும் போஸ்ட்டுகளை பார்த்து, நான் வருத்தம் அடையும்  போது, அதேப் போல் நான் போடும் போஸ்ட்டுகளை பார்த்து மற்றவர்களும் வருத்தம் அடைவார்கள் என்பதை உணர்தல் அவசியம். இன்றைய இளம் தலைமுறை, இதை ஒரு குழப்பமான பிரச்சினையாக பார்த்து, தனக்குள் இருக்கும் நம்பிக்கையை இழக்கின்றனர். செல்ஃப்  கான்ஃபிடென்ட்டுக்காக ‘டிக் டாக்’ செய்தா நல்ல விஷயம். சிலர் அதையே வாழ்க்கையா வைத்திருப்பதை பார்த்தால் கஷ்டமா இருக்கு. எல்லோருக்கும்  இருக்கும் ஆசைதான் மற்றவர் நம்மை கவனிக்க வேண்டுமென்பது. மற்றவர்களை பார்த்து உங்களை கீழே எண்ணாதீர்கள்” என்றார் நிவேதிதா சதீஷ்.

தொகுப்பு: அன்னம் அரசு

Tags : tick-talk ,
× RELATED டிக் டாக் செயலியில் கலவரத்தை தூண்டும்...