கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி  

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.

* பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைத்து மிக்ஸியில் போட்டு பவுடர் செய்து வைத்துக்கொண்டு அதை கறி வறுவல் செய்யும்போது பயன்படுத்துங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

* வீடுகளில் தினமும் ரசம் வைக்கிறோம். வீட்டில் உள்ளவர்களை கணக்கெடுத்து ஆளுக்கு ஐந்து மிளகு என்ற கணக்கில் ரசத்தில் பொடித்துப் போடுங்கள்.

- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

* துவரம்பருப்பு துவையல் தயாரிக்கும்போது சிறிது கொள்ளையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். விருப்பப்பட்டால் பூண்டும் சேர்த்து அரைக்கலாம். உடம்பிற்கு நல்லது.

* மசால் வடை செய்யும்போது அரைத்த மாவில் அரை மணி நேரம் ஊறிய ஒரு பிடி ஜவ்வரிசியையும் ஒரு பிடி பயத்தம் பருப்பையும் பிழிந்து போட்டுக் கலந்து வடை தட்டுங்கள். மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

- எஸ்.சுமதி, கரூர்.

* வாங்கி வைத்த பால் பாக்கெட்டை ஃபிரிட்ஜில் வைக்க முடியவில்லை. கரண்ட் கட். அவசரத்துக்கு காய்ச்சவும் நேரமில்லை. அப்பொழுது பதட்டப்படாமல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் பால் பாக்கெட்டை போட்டு வைத்தால் போதும். நான்கு மணி நேரம் கழித்துக்கூட காய்ச்சிக் கொள்ளலாம்.

* கறிவேப்பிலையையும், கொத்துமல்லியையும் வதக்கி சமைக்கக் கூடாது. அப்படியே பச்சையாக உணவில் சேர்த்தால் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும். ஊட்டச்சத்துகளும் அதில் அப்படியே தங்கும்.

* ரசம் செய்யும்போது கைவசம் கொத்துமல்லி இலை இல்லாவிட்டால், சிறிது மல்லியை (தனியா) நசுக்கிப் போட்டால் ரசம் வாசனையாக இருக்கும்.

- கே.ராஜேஸ்வரி, திருச்சி.

* வெண்பொங்கல் செய்யும்போது ஒரு சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்துச் சேர்த்தால் பொங்கல் கமகம என மணக்கும்.

* தேங்காய்த் துருவலுடன் 1 ஸ்பூன் பச்சரிசியை 10 நிமிடம் ஊற வைத்த பின்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கெட்டியான தேங்காய்ப்பால் கிடைக்கும்.

- சீதா ரவி, திருவான்மியூர்.

* வெள்ளை ரவை, கோதுமை ரவை இவற்றில் உப்புமா செய்தால், இறக்கி வைத்த பிறகு ஒரு மூடி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறினால் சுவை சூப்பராக இருக்கும்.

* தக்காளி ரசம் பருப்பு சேர்த்து செய்யும்போது கடைசியில் ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு, கறிவேப்பிலையுடன் சிறிது கட்டிப்பெருங்காயம் பொரித்து தாளித்துப் போட்டு மூடி வைத்து பிறகு பரிமாற வேண்டும். நன்கு கலக்கி விட்டு ரசம் ஊற்றினால் சுவையும், மணமும் அள்ளும். சாப்பிடுபவர் கையில் வாங்கிக் குடிக்கத் தோன்றும்

- கே.சாந்தி, சென்னை.

* வெந்நீர் கொதிக்க விடும் பாத்திரத்தில் இரண்டு கொத்து வேப்பிலையை போட்டு வைத்திருந்து வேப்பிலையை எடுத்துவிட்டு வெந்நீரில் தலை குளிக்கலாம். இதனால் சரும பாதிப்புகள் சரியாகும்.

*ப ண்டிகைக்கு படைப்பதற்கு நிறைய வாழைப்பழங்களை மொத்தமாக வாங்கிவந்து விடுவோம். ஒரே சமயத்தில் பழுத்து விடும். இதைத் தவிர்க்க படைப்பதற்குத் தேவையான பழங்களை தனியே எடுத்து வைத்துவிட்டு மற்ற வாழைப்பழங்களின் காம்புகளில் செல்லோ டேப்பை சுற்றிவிட்டால் ஒரே சமயத்தில் பழுக்காது.

* மிக்ஸர், ஓமப்பொடி, ஓலை பக்கோடா போன்றவற்றை செய்ய மிஷினில் மாவு அரைக்க கொடுக்கும்போது முக்கால் கிலோ கடலைப்பருப்புக்கு கால் கிலோ பட்டாணி பருப்பையும் சேர்த்து அரைத்து கார வகை பலகாரங்கள் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

- எஸ். மேரி ரஞ்சிதம், நாட்டரசன்கோட்டை.

* தயிர் உறை ஊற்றினால் கெட்டியாகப் புளிக்காமல் வர எளிமையான டிப்ஸ்... பாலைக் காய்ச்சி விரல் சூடு தாங்கும் வரை ஆறவிட்டு ஒரு ஸ்பூன் தயிர் விட்டு பாலும், தயிரும் மிக்ஸ் ஆகுமாறு நன்றாக ஆற்ற வேண்டும். பிறகு அதை ரெப்ரிஜிரேட்டர் மேலே லேசாக சூடு இருக்கும் பகுதியில் ஒரு நாலு மணி நேரம் வைத்திருந்து பார்த்தால் கெட்டியான புளிக்காத சுவையான கெட்டித்தயிர் ரெடியாக இருக்கும்.

* தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால் அதன்மீது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

- கவிதா சரவணன், ஸ்ரீ ரங்கம்.

* சோளப்பொரி அல்லது கோதுமைப் பொரியில் காரம் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது கட்டித்தயிர் கலந்து காலை உணவாகச் சாப்பிட்டால் கொழுப்பில்லாத சத்துணவாக அமர்க்களச் சுவையுடன் இருக்கும்.

* முறுக்கை உடைத்து மிக்ஸியில் தூள் செய்து கூட்டு, பொரியலில் தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.

* சீரகம், மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஐந்து சிறிய வெங்காயத்தை நறுக்கிப்போட்டு வதக்கி உப்பு கலந்து சாதத்தை கலந்து வையுங்கள். ஜீரா ரைஸ் தயார்.

- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

தொகுப்பு:  அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: