கோவை: வெலிங்டன் மைதானத்தில் இருந்து கோவை சூலூர் விமான படை தளத்தை நோக்கி 13 ராணுவ வீரர்களின் உடல்கள் வரிசையாக 13 ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது பறளியாறு அருகே பாதுகாப்புக்கு சென்ற காவல் துறை வாகனம் விபத்துக்குள்ளானது. ராணுவ வீரர்களின் உடல் அமரர் ஊர்தியில் சென்று கொண்டிருந்த போது திடீரென வாகனத்தின் போக்குவரத்து தடைபட்டதால் ஆங்காங்கே உடனடியாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அப்போது பின்னால் சென்ற ஓர் அமரர் ஊர்தி முன்னாள் சென்ற அமரர் ஊர்தியுடன் மோதி விட்டது. அதில் ஒரு ராணுவ வீரரின் உடல் இருந்தது. இந்த சூழ்நிலையில் பயணம் தடைபட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக ஏற்கனவே இதுபோன்ற தடைகள் வந்தால் சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டன. விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் இருந்த ராணுவ வீரரின் உடல் மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு தற்சமயம் மீண்டும் சூலூர் விமானப்படை தளத்தை நோக்கி ஆம்புலன்ஸ்கள் சென்று கொண்டுள்ளன.