கோயில் நிலங்கள் குத்தகை விடுவதை எதிர்த்த வழக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம்: ஐகோர்ட்டில் அரசு பதில்

சென்னை: தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள விஜய வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பாபுராயன் பேட்டையில் 250 ஏக்கர் நிலத்தை ஏலம் மூலம் குத்தகைக்கு விட கடந்த நவம்பர் 24ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர்கள் இல்லாத நிலையில் கோயில் சொத்துக்களை ஏலம் விடக் கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவித்தார். இதையடுத்து, ஏல நடவடிக்கைகளை தொடர அனுமதியளித்த நீதிபதிகள், ஏலத்தை இறுதி செய்யக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: