வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (55). கான்ட்ராக்டர். காஞ்சி மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர். கடந்த 2 நாட்களுக்கு முன் இவரது வீட்டின் பின்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் கிரஹப்பிரவேசம் நடந்தது. இதனால், பழைய வீட்டை பூட்டிவிட்டு, நேற்று முன்தினம் இரவு பழனி, குடும்பத்துடன் புதிய வீட்டில் தங்கினார். இந்நிலையில், நேற்று காலை பழனி, பழைய வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 51 சவரன் நகை, ரூ.3.5 லட்சம், கணக்கிடாத மொய் பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
புகாரின்பேரில் வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சின்னய்யன்குளம் பகுதியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலை அதே பகுதியை சேர்ந்த பெருந்தனக்காரர் கேசவன் என்பவர் பராமரித்து வருகிறார். தினமும் காலையில் கோயில் திறக்கப்பட்டு பூஜை நடத்தி, இரவு 7 மணியளவில் மூடப்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து, பெருந்தனக்காரர் கேசவன் கோயிலை மூடிவிட்டு சென்றார். நேற்று காலை கோயிலை திறக்கச் சென்றபோது, கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைந்து இருந்தது. கருவறையில் இருந்த 4 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த 5 கிராம் தங்க செயினை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.