அம்பத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு உபரிநீர் கொரட்டூர் ஏரிக்கு செல்ல சிறு பாலம் அமைக்க உத்தரவு

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மழைநீர் தேங்காமல் இருக்க உபரிநீரை கொரட்டூர் ஏரிக்குள் கொண்டு செல்ல சிறு பாலம் அமைக்க உத்தரவிட்டார். தமிழகத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடிக்குப்பம் ரயில் நகர் தரைப்பால பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது, கனமழையால் பழுதடைந்த தரைப்பாலத்தை சீரமைத்திடவும், நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 93 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், கருக்கு பிரதான சாலை, டிடிபி காலனியில் கொரட்டூர் ஏரி பகுதியில்  வெள்ளத்தடுப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். கொசஸ்தலையாற்று வடிநிலை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள ரயில்வே பாதையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் கான்கிரீட் தரைதளத்துடன் கூடிய வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, மழைக்காலங்களில் அம்பத்தூர் பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் உபரிநீரை கொரட்டூர் ஏரிக்குள் கொண்டு செல்ல கூடுதலாக ஒரு சிறு பாலம் அமைக்க சென்னை மாநகராட்சிக்கும் மற்றும் இரண்டு வெள்ள சீராக்கி அமைக்க பொதுப்பணித்துறைக்கும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை கலெக்டர் விஜயா ராணி, திமுக பகுதி செயலாளர்கள் எம்.டி.ஆர்.நாகராஜ், டி.எஸ்.பி.ராஜகோபால்,  தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி.கே.மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: