கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்குவதால் உ.பி தலைநகருக்கு 144 தடை உத்தரவு: ஒமிக்ரான் பரவல் அச்சத்தால் நடவடிக்கை

லக்னோ: ஒமிக்ரான் பரவல் அச்சத்திற்கு மத்தியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்குவதால் உத்தரபிரதேச தலைநகருக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று டெல்லி, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் பரவியுள்ளதால், இதுவரை 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநில தலைநகரான லக்னோ காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், டிசம்பர் 31ம் தேதி இரவு கொண்டாடப்படும் ஆங்கில புத்தாண்டு விருந்துகளின் போது கொரோனா நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

முகக் கவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும். லக்னோ நகரில் சிஆர்பிசியின் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் (நேற்று) வரும் ஜனவரி 5ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். கொரோனா தொடர்பாக அரசின் சார்பில் வெளியிடப்படும் நெறிமுறையை கண்டிப்பாக கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாநில சட்டப் பேரவை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

இந்த பகுதிகளில் எளிதில் தீப்பற்றக் கூடிய வாகனங்கள் செல்லக் கூடாது அல்லது அதுபோன்ற பொருட்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. சைபர் க்ரைம் போலீசார் ஆன்லைன் மூலம் ெதாடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்வர். ஆன்லைனில் வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடுவோர் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருமண விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: