டெல்லி: 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். அச்சமயம் 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம், விவசாயிகள் போராட்டம், நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய சோனியா காந்தி, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அரசியலமைப்பு மற்றும் விதிகள் இரண்டையும் மீறுவதாக கூறினார்.