திருச்சி, மணப்பாறை பகுதிகளில் மழை இல்லாததால் மெல்ல... மெல்ல... வடிந்துவரும் அரியாறு வெள்ளம்-திருச்சி-திண்டுக்கல் சாலையில் இன்று மாலைக்குள் இயல்பு நிலை திரும்பும்

திருச்சி : திருச்சி, மணப்பாறை பகுதிகளில் நேற்று மழை இல்லாததால், அரியாற்றில் பெருக்கெடுத்து செல்லும் மழை வெள்ளம் இன்று மாலைக்குள் வடிந்துவிடும். திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஓடும் வெள்ளநீர் வடிந்து இன்று மாலைக்குள் இயல்புநிலை நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் பொன்னணியாறு அணை பகுதியிலிருந்து அரியாறு தலைப்பு துவங்கினாலும், திருச்சி அருகே உள்ள அரியாவூர் என்ற ஊரிலிருந்து தான் இந்த ஆறுக்கு அரியாறு என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மணப்பாறை மாமுண்டி ஆறு, பள்ளிவெள்ளி மூக்குஒடை பகுதியில் இருந்து வரும் நீர் அரியாறு வழியாக புங்கனூர், தீரன்நகர் வழியாக கோரையாற்றில் இணைந்து குடமுருட்டி ஆறு வழியாக காவிரியில் கலக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் அரியாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த நவ.28ம் தேதி புங்கனூர்-அல்லித்துறை இணைப்பு பாலம் அருகே அரியாறு கரை உடைந்தது. இதனால் புங்கனூர்-தீரன்நகர் இடையே வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இனியானூர், பிராட்டியூர் மேற்கு பகுதியில் உள்ள முருகன் நகர், வர்மா நகர் தெற்கு ஆகிய பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்தது. திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் செய்வதறியாமல் தவித்தனர். வயல்வெளிகள் ஏரி போல காட்சியளித்தன. தண்ணீர் ஓரளவு வடிந்ததால் கரை உடைப்பு சரி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் மணப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் காலை 3 மணி நேரத்தில் 27 செ.மீ., மழை கொட்டித்தீர்த்ததால், மீண்டும் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரியாறு கரையோர மக்களுக்கு திருச்சி கலெக்டர் சிவராசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். நேற்று முன்தினம் காலை பெய்த மழைநீர் அரியாறு வழியாக நேற்று மாலை திருச்சி புங்கனூர் பகுதியை அடைந்தது. அரியாற்றில் மீண்டும் வெள்ளம் வந்ததால், புங்கனூர்-அல்லித்துறை அருகே கரை அடைத்த பகுதியில் மீண்டும் உடைத்து தண்ணீர் வெளியறியது. இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவு மேல்புறம் அதே கரையில் 70 மீட்டர் தூரம் கரை உடைந்தது.

இதனால் கூடுதல் தண்ணீர் வெளியேற துவங்கியது. இதனால் இனியானூர், புங்கனூர், தீரன்நகர், பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. திருச்சி-திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் திண்டுக்கல் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனங்களை தவிர்த்து அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அமர்வு நீதிமன்ற போலீசார் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் உள்ளிட்ட காவல்துறையினர் அங்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

திருச்சி, மணப்பாறை பகுதிகளில் நேற்று மழை இல்லாததால், அரியாற்றில் பெருக்கெடுத்து செல்லும் மழை வெள்ளம் இன்று மாலைக்குள் வடிந்துவிடும். வெள்ளநீர் வடிந்ததும் கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும் என அரியாறு வடிநிலக் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணப்பாறை, திருச்சி பகுதிகளில் மழையில்லை என்றாலும், தொடர் மழையின் காரணமாக பூமி குளிர்ந்து பல இடங்களில் தண்ணீர் பூமிக்குள் இறங்காமல் அப்படியே வடிகால் வழியாக வெளியேறி வருகிறது. மேலும் பல இடங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதனால் அரியாற்றில் வெள்ளம் வடிய தாமதமாகி வருகிறது. இல்லையென்றால் நேற்று மதியமே இந்த வெள்ள நீர் முழுவதும் வடிந்து ஓடியிருக்கும்.

அரியாறு கரைகள் பலவீனம் 2 இடங்களில் உடைப்பு; 2 இடங்களில் அரிப்பு

திருச்சி புங்கனூர்-அல்லித்துறை இணைப்பு பாலம் அருகே அரியாறு ஆற்றில் கடந்த 28ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் சவுக்குக்கட்டைகள் அடித்து மணல் மூட்டைகள் போட்டு அடைப்பு சரி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்தினம் மணப்பாறையில் பெய்த மழையால் அரியாற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு வலது கரையில் அடைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. மேலும் அதே பகுதியில் மேல் பகுதியில் கரை உடைந்தது.

தவிர, வலது கரையில் உடைபட்ட பகுதிக்கு நேர் எதிரே இடது கரை பகுதியில் இரண்டு இடங்களில் பாதி கரை அரித்துச்செல்லப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் சவுக்குக்கட்டை அடித்து மணல் மூட்டைகள் போட்டு அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இடத்தில் சவுக்குக்கட்டைகள் அடிக்கப்பட்டுள்ளது. மணல் மூட்டைகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. வெள்ள்ம வடிந்த பின் மணல் மூட்டைகள் கொண்டு அந்த இடத்தில் அடைக்கும் பணி துவங்கும். மொத்தத்தில் அரியாறு இரண்டு கரைகளில் வலது கரையில் இரண்டு இடங்களில் உடைப்பும், இடது கரையில் இரண்டு இடங்களில் கரை அரிக்கப்பட்டு கரை பலவீனமாகவும் காணப்படுகிறது.

பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து வந்த பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் வண்ணாங்கோவில் அருகே பூங்குடி, மணிகண்டம் வழியாக மதுரை பைபாஸ் சாலைக்கு திருப்பிவிடப்பட்டன. அந்த வாகனங்கள் மன்னார்புரம் வந்து திருச்சி வந்தன. சிறிய சாலை கொண்ட பூங்குடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேனி, கம்பம், குமுளி, பழனி, கொடைக்கானல், திண்டுக்கல், துவரங்குறிச்சி, மணப்பாறை ஆகிய பகுதிகளிலிருந்து வந்த வெளியூர் பஸ்கள் மற்றும் மறவனூர், ஆலம்பட்டிபுதூர், இனாம்குளத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து திருச்சி நோக்கி வந்த டவுன் பஸ்களும் திருப்பிவிடப்பட்டன. இதனால் குறித்த நேரத்துக்கு அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர்.

மேலும், ஆலம்பட்டி, இனாம்குளத்தூரிலிருந்து திருச்சி ேநாக்கி வரும் டவுன் பஸ் வருகைக்காக காத்திருந்த சோழன்நகர், ராம்ஜிநகர், பிராட்டியூர் பகுதி மக்கள் பஸ்கள் ஏதும் வராததால் ஏமாற்றமடைந்தனர். கிடைத்த வாகனங்களில் ஏறிச்சென்றனர். எனவே இதுபோன்ற பேரிடர் காலங்களில் இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதியை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: