நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரி ஆலோசனை

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் கொள்ளிடம் அருகே உள்ள தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம்,ஆர்ப்பாக்கம், பழையபாளையம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த சம்பா நெற்பயிரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கூறுகையில்,தற்போதைய மழை காரணமாக நெற்பயிரில் புகையான் தாக்கும் அபாயம் உள்ளது.நெற்பயிர் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்துகொண்டு பயிரின் சாறை உறிஞ்சுகிறது.இதனால் நெற்பயிரில் திட்டுத்திட்டாக வட்டவடிவில் காயத் தொடங்கும்.

புகைந்துவிட்டது போல் தோன்றுவதால் புகையான் என்று பெயர்.நெற்பயிரில் தண்ணீர் தேங்கி உளள பகுதிகளில் பூச்சித் தாக்குதல் இருக்கும். எனவே வயலில் ஒரு அங்குலத்திற்கு மேல் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தழைச்சத்து அதிகம் இடுவதை தவிர்க்க வேண்டும். தழைச்சத்து மூன்று அல்லது நான்கு முறை பிரித்து இடலாம்.புகையான் பூச்சி தாக்குதலை தடுக்க நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நெருக்கமாக நடவு செய்வதை தவிர்த்து இடைவெளி விட்டு நடவேண்டும். விளக்குப் பொறி வைத்து எளிதில் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது ரசாயன உரத்தைப் பயன்படுத்தலாம் என்றார்.

Related Stories: