கோல்டன்ஹவரை மிஸ் செய்திடாதீங்க!

நன்றி குங்குமம் தோழி

என்னதான் கல்வி பெற்றிருந்தாலும், அனுபவமுள்ள நபர்கள் உடனிருந்தாலும் இன்னும் பல தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், முதலில் எப்போது தர வேண்டும், எப்போதெல்லாம் தர வேண்டும், எதனால் குழந்தைகள் அழுகின்றன… என அடுக்கடுக்கான கேள்விகளும், சந்தேகங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மூதாதையர்களை பின்பற்றாததும், அவர்கள் வழிவகுத்த பாதை மாறி போனதும் இதற்கு ஓர் காரணமாக அமைந்திருந்தாலும், இன்றைய சூழல் எவ்வாறு இருக்கிறது, அதில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிறார்  ‘பொக்கிஷம்’ என்கிற அமைப்பை நடத்தி வரும், தாய்ப்பால் ஆலோசகர் பேபி ஸ்ரீ.

பல தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பேபி ஸ்ரீ-யின் பூர்வீகம் கோவை. தற்போது சென்னையில் வசித்து வரும் இவருக்கு, குழந்தை பிறந்த போது ஏற்பட்ட சந்தேகங்களை போல் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து, இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளவும், அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதற்காகவும் பாண்டிச்சேரியில் தாய்ப்பால் ஆலோசகருக்கான பாடம் படித்துள்ளார்.

“குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதை கோல்டன் ஹவர் என்று சொல்கிறோம். அப்போது குழந்தைக்கு பால் உறிஞ்சும் தன்மை அதிகமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருப்பதால், பால் குடிக்க கற்றுக் கொள்கிறது. அந்நேரத்தில் வரும் மஞ்சள் நிற பால் சீம்பாலாகும். இதுதான் குழந்தைக்கு முதல் தடுப்பூசி. அதில் அவ்வளவு பாதுகாப்பு பொருட்கள் இருப்பதால், எதிர்காலத்தில் பல நோயிலிருந்து பாதுகாக்கிறது.

முதல் மூன்று நாட்களில் வருவது சீம்பால்தான். அதனால்தான் சிலர் அழுத்தி பார்க்கும் போது பால் இல்லாதது போல் உணர்கிறார்கள். குழந்தை வாய்வைத்து சப்பும் போது அது குழந்தைக்கு கிடைக்கிறது. இன்னும் ஒரு சிலர் சிசேரியன் செய்திருப்பதால் பால் கொடுக்க முடியாது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது, ஒரு பக்கமாக படுத்து கொடுக்கலாம். எல்லோருமே குழந்தைக்பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் கண்டிப்பாக தாய்ப்பால் கொடுத்தாக வேண்டும். இதை மருத்துவமனையிலும் சொல்லி நாம் பின்பற்றுவது அவசியம். ஏனென்றால் இது பற்றிய முழு விழிப்புணர்வு எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பதில்லை” என்கிறார் பேபி ஸ்ரீ.

“ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தும் பேபி ஸ்ரீ, அதற்கான காரணங்களை கூறும் போது, “முன்பு போல் இப்போதெல்லாம் தேன், சர்க்கரை தண்ணி, உர மருந்து, ஜாதிக்காய் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஏதும் தற்போது சுத்தமில்லாமலும், கலப்படமுமாகவும் உள்ளது. இதனால் குடல் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. தண்ணீர் கூட தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலிலே 88% நீர் இருக்கிறது. குழந்தையின் தாகத்திற்கு தாய்ப்பாலே போதுமானது. ஒரு சில வீடுகளில் குழந்தை உடம்பு வைக்கவில்லை, பால் பற்றவில்லை என்று, கூழ், பசும் பால் போன்ற ஆகாரங்களை கொடுக்கின்றனர். இது அந்த குழந்தையின் எதிர்காலத்தில் மலச்சிக்கல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை உண்டாக வழிவகுக்கிறது.  பசும் பால், அதன் கன்றுக்கு ஏற்றமாதிரி புரதம் நிறைந்திருக்கும். அது எப்படி குழந்தைக்கு ஒத்துவரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தாய்ப்பால் தவிர மற்ற பால்கள் எதுவுமே குழுந்தைக்கு ஒரு வருடத்திற்கு தரக்கூடாது. தாய்க்கு எந்த நோயாக இருந்தாலும், அதற்கான மருத்துவரின் ஆலோசனை பெற்று குழந்தைக்கு தாய்ப்பால் தரலாம். ஒரு குழந்தைக்கு அந்த நாளைக்கு தேவையான அனைத்து சக்தியும் தாய்ப்பாலில் மட்டுமே கிடைக்கிறது. இங்கு பலரது பிரச்சினையாக சொல்வது, குழந்தைக்கு பால் பற்றவில்லை. பால் குறைவாக இருக்கிறது. எல்லா தாயாலும் பால் கொடுக்க முடியும் என்பதை நம்ப வேண்டும். அதன் அடிப்படை புரிதல் இருந்தால் போதும். எதனால், எப்படி  பால் சுரக்கிறது, அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே போதும். மார்பகத்தை அழுத்தி பார்த்து இதை கணிப்பது தவறு. தாய்ப்பால் அழுத்தும் போது வராவிட்டாலும் பாப்பா குடிக்கும் போது வரும். இதெல்லாமே ஹார்மோன்களின்  வேலை. புரோலோக்டின், ஆக்சிடோசின் என்கிற இரண்டு ஹார்மோன்கள் உள்ளன.

குழந்தை மாரை சப்பும் போது புரோலோக்டின் ஹார்மோன் சுரக்கிறது. ஆக்சிடோசின் என்பது தாயின் மனநிலையை பொறுத்து சுரக்கும். அதனால் மகிழ்வாய் வைத்திருப்பது நல்லது. அதேபோல் குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு வாய் வைத்து குடிக்கிறதோ அவ்வளவுக்கு பால் சுரக்கும். இதை விட முக்கியமானது தாயின் மனநிலை. அதாவது குழந்தை பிறந்த பின்னிருக்கும் வலி. வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்வது என அந்த சூழல் தாயிற்கு குழப்பமாகவும், மன இறுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த தாயுக்கும்-சேயுக்கும் எவ்வளவு மகிழ்ச்சியான சூழல் உருவாக்குகிறோமோ அவ்வளவு நல்லது. இதற்கு ஒரு குடும்பமே உறுதுணையாக இருத்தல் அவசியம்” என்று கூறும் பேபி ஸ்ரீ, குழந்தைக்கு தாய்ப்பால் போதுமானதாக இருப்பதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பது பற்றி பேசினார்.

‘‘ஒரு குழந்தை பால் குடித்த பின்னரும் அழுதுகொண்டே இருக்கிறதென்றால், பால் பற்றவில்லை என்பது மட்டும் அர்த்தம் கிடையாது. பால் பத்துதா இல்லையா என்பதை இரு விஷயங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அவர்கள் கழிக்கும் சிறுநீரின் அளவு. ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறாங்கன்னு கவனிப்பது ரொம்ப முக்கியம். மினிமம் ஆறிலிருந்து எட்டு முறை 24 மணி நேரத்திற்குள் போயிருக்க வேண்டும். இது சரியா பார்த்தாலே குழந்தைக்கு பால் போதுமானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அடுத்து எடை. எல்லா குழந்தையுமே பிறந்த முதல் பத்து நாட்களில் எடை குறைவாங்க. சராசரியாக பதிநான்கு நாட்களில் பிறந்த எடை வந்துவிடனும். அதன் பின் எடை சீரான அளவில் கூடும். இது இல்லை என்றாலும் பால் பற்றவில்லை என்று தெரிந்துகொள்ளலாம். சரியான உணவு கிடைத்த பிறகும் குழந்தைகள் ஏன் அழுகின்றன என்கிற கேள்வி எழலாம். குழந்தைக்கு இந்த உலகமே புதிது.

ஒரு கொசு உட்கார்ந்தாலும், பேசுவது பிடிக்காமலும், காத்து சத்தம் பிடிக்கவில்லையென்றாலும், வயிற்று வலி என குழந்தைகள் அழுவதற்கு காரணம் பல உண்டு. பசிக்கு மட்டும்தான் குழந்தை அழும் என்கிற எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும். முக்கியமாக பெரியவங்க. அவர்கள் தான் உடனே பால் பத்தல போல என்று ஆரம்பித்துவிடுவார்கள்” என்கிறார். ‘‘குழந்தை பிறந்த பதிநான்கு நாட்களுக்கு 2-3 மணி நேரத்திற்குள் 20-25 நிமிடம் கண்டிப்பாக பால் கொடுத்தாகணும்” என்று கூறும் பேபி ஸ்ரீ, “அதை ஒரு மார்பகத்திலேயே கொடுக்க வேண்டும்” என்கிறார். முதல் பத்து நிமிடங்களில் நீர் சத்தும், அடுத்த பத்து நிமிடங்களில் கொழுப்பு சத்தும் சுரக்கும்.

இதனால் ஒரே மாரில் 25 நிமிடம் கொடுப்பது அவசியம் மற்றும் ஆரோக்கியமும். சில குழந்தைகள் முதலில் சுரக்கும் பாலை மட்டும் குடித்துவிட்டு உறங்கிவிடும். இந்த நேரத்தில் குழந்தைகளை சீண்டி உறக்கம் கலைத்து பாலை குடிக்க செய்ய வேண்டும்.  இது பிறப்பு எடையை சரி செய்யும் வரை தர வேண்டும். அதன் பின் குழந்தை எப்போது கேட்கிறதோ அப்போது தரலாம். இந்த 20-25 நிமிடம் மூன்று மாதம் வரை கொடுக்க வேண்டும்” என்று கூறும் பேபிஸ்ரீ தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு என்ன பயன் என்பதை விளக்கினார்.

‘‘கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பழைய நிலைக்கு கொண்டு வர தாய்ப்பால் கொடுப்பது உதவும். உளவியல் ரீதியாக தாய் சேய் பிணைப்பு ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறையும். மார்பக புற்று நோய், கருப்பை புற்றுநோய் வராது. எளிய உணவு தாய்ப்பால் ஆகும். அழகு குறைந்துவிடும் என்பதெல்லாம் பொய். தாய்ப்பால் கொடுப்பதால் ஹர்மோன்ஸ் எல்லாம் சமச்சீராகி அழகு கூடி, முகப்பொலிவு, ஸ்கின் டோன் எல்லாம் பொலிவடையும். எடை குறைக்கவும் உதவுகிறது.

இன்று பல தாய்மார்கள் வேலைகளுக்கு செல்லக் கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பால் எடுத்து வைத்துவிட்டு செல்லலாம். அதற்கான பம்பிங் மிஷின்கள் ஆன்லைனிலும், கடைகளிலுமே கிடைக்கிறது. முதல் ஆண்டு வரைதான் முதல் உணவு தாய்ப்பால். அதற்கு பின் தாய்ப்பால் இணை உணவாகிடும். ஆறு மாதம் முடிந்த பின் காய்கறிகள், கூழ் கொடுக்க ஆரம்பிக்கலாம். பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது ரொம்ப நல்லது. குறைந்தது இரண்டு வயது வரை பால் கொடுக்க வேண்டுமென்று WHO சொல்றாங்க. அந்த குழந்தையா நிறுத்துகிற வரை கொடுக்கலாம்” என்று கூறும் பேபி ஸ்ரீ, பாட்டிலில் பால் கொடுப்பதால் என்ன பிரச்சினை என்பதை கூறினார்.

‘‘ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலோடு அவ்வப்போது புட்டிப் பாலும் கொடுத்து பழக்கினால், அந்த குழந்தை மீண்டும் தாய்ப்பால் குடிப்பதைத் தவிர்க்க பார்க்கும். காரணம், புட்டி பால் குடிப்பது எளிமையானது. புட்டியினை கவிழ்க்கும் போது தானாகவே சொட்டு சொட்டாக பால் விழும். தாய்ப்பால் குடிப்பது அப்படியல்ல. குழந்தை தாயின் மார்பினை நன்கு கவ்வி சப்பும் போதுதான் தாய்ப்பால் வரும். இந்த நிலை நீடிக்கும் போது தாய்ப்பால் சுரப்பது குறைந்து போகிறது. அதே போல் ஒரு சிலர் பெரிய மார்பு இருந்தால் பால் இருக்கும், சிறிய மார்பு இருந்தால் இருக்காது என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதற்கும் பால் சுரப்பதற்கும் சம்மந்தமில்லை. கொழுப்பு திசுக்கள் தான் மார்பகத்தின் அளவை தீர்மானிக்கின்றன. பெரும்பாலான மார்பகங்களில் ஒரே எண்ணிக்கையில் தான் பால் சுரப்பிகள் அமைந்துள்ளன.

எப்போதும் மார்பகம் தாய்ப்பால் இல்லாமல் காலியாக இருந்ததில்லை. குழந்தை அருந்த அருந்த பால் தொடர்ந்து சுரக்கிறது’’ என்றவர் குழந்தையை எவ்வாறு வைத்து பாலூட்ட வேண்டுமென்பதும் தெரிந்திருப்பது அவசியம் என்கிறார். ‘‘ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போது மார்பகங்களை சுத்தம் செய்ய தேவையில்லை. இயற்கையாகவே மார்பகங்களில் ஒரு வித எண்ணை சுரக்கும். குழந்தைக்கு காம்பை எடுத்து வாயில் வைக்காமல், மூக்கில் வைத்தாலே அதன் வாசம் தெரிந்து, வாய் திறந்து விடும். மணமுள்ள சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. சிலர் தாய்ப்பால் கொடுக்கும் போது வலி இருப்பதாக தெரிவிப்பார்கள். அப்படி வலி ஏற்பட்டால் அவர்கள் சரியான முறையில் அமர்ந்து தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று அர்த்தம்.

குழந்தையினை மடியில் கிடத்தி மார்போடு அனைத்து பால் புகட்ட வேண்டும். சிலருக்கு உயரம் சிரமமாக இருந்தால், மடியில் தலையணை வைத்துக் கொண்டு அதில் குழந்தையை வைத்து பால் புகட்டலாம். முதுகினை வளைத்து பால் புகட்டும் போது கண்டிப்பாக வலி ஏற்படும். அதனால் எல்லா தாய்மார்களும் குழந்தைக்கு பால் புகட்டும் முன் சரியான நிலையில் அமர்ந்து இருக்கிறீர்களா என்று பார்த்து கொடுக்க வேண்டும். இது போன்ற விழிப்புணர்வுகளை பள்ளியிலேயே பாடமாக வைக்க வேண்டும். இல்லையேல் கர்ப்பம் அடைந்த உடனாவது தாய்ப்பால் ஆலோசகரை அணுகி தெரிந்து கொள்ளலாம்” என்கிறார் பேபி ஸ்ரீ.

தொகுப்பு: அன்னம் அரசு

Related Stories: