மழையால் செழித்து வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகளுக்கு உரமிடுதல் பணிகள் தீவிரம்

சாயல்குடி : தொடர் மழையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை பயிர்கள் அமோகமாக வளர்ந்து பூத்து வருவதால், விவசாயிகள் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி,செவல்பட்டி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், கூரான்கோட்டை, பூப்பாண்டியபுரம், பெரியகுளம், கடுகுசந்தை, சத்திரம், மேலச்செல்வனூர், காவாகுளம், மேலக்கிடாரம் உள்ளிட்ட கடலாடி வட்டாரத்தில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1900 ஏக்கரிலும், நயினார்கோயில் அருகே பாண்டியூர், சேமனூர், பரமக்குடி அருகே அக்ரமேசி, கமுதி அருகே பசும்பொன், மருதகநல்லூர் போன்ற பகுதிகள் உட்பட மாவட்டத்தில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத கடைசியில் துவங்கியது. இதனால் மாவட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்படும் விவசாய நிலங்களை சீரமைத்து, உழவார பணிகளை செய்து வந்தனர். 105 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடிய பயிரான நிலக்கடலை கார்த்திகை மாதமான கார்த்திகை பட்டத்தில் பயிரிடப்படுவது வழக்கம். இதற்கு ஏதுவாக நவம்பர் மாதம் முதல் பகுதியில் பெய்து வரும் மழைக்கு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நிலக்கடலை விதைகளை விதைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கடலாடி வட்டார பகுதிகள் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகிறது.

பயிர் நன்றாக வளர்வதற்கும், வேர் வலுவாக இருக்கவும் அடி உரம் போன்ற உரங்கள் இடப்படுகிறது. விவசாயிகள் ஆர்வத்துடன் களை எடுத்தல் போன்ற பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். கடலாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி கூறும்போது, மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலாடி பகுதியில் சுமார் 1900 ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசு பரிந்துரையின் பேரில் தரணி ரகம் கடலை அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. கோ 7 மற்றும் நாட்டு நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்படும் பகுதிகள் செம்மண் நிலம் போதிய ஈரப்பதத்துடன் செடிகள் நன்றாக வளர்ந்து வருகிறது.

களை எடுத்திருந்தால் தழைமணி சாம்பல் சத்து உரம்,  ஜிப்சம் உரத்தினை 45 நாளில் ஏக்கருக்கு 80 கிலோ என்ற வகையில் இரண்டு முறை 160 வரை கிலோ பயன்படுத்தலாம். உரமிட்ட பிறகு செடியின் அடிப்பகுதியை மண்ணை கொண்டு அணைக்க வேண்டும். இதனால் மகசூல் அதிகரிப்பதுடன், பருப்பு பெரியதாக இருக்கும், எண்ணெய் சத்து அதிகமாக இருக்கும்.

மேலும் இயற்கை பேரிடர்களால் நிலக்கடலை பயிர் பாதிக்கப்பட்டதால் பயிர்க்கு பயிர்காப்பீடு திட்டத்தில் பிரிமீயம் செலுத்த இம்மாதம் 31ம் தேதி  கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ.309.75 செலுத்த வேண்டும். செடியை பூச்சி தாக்குதல் உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தால் விவசாயிகள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம், நேரடி ஆய்வு செய்து தீர்வு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: