குளிர்கால ஒலிம்பிக்ஸை புறக்கணித்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் : அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!!

வாஷிங்டன்: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸை அமெரிக்கா தூதரக ரீதியில் புறக்கணித்தால் அமெரிக்கா, சீனா, இடையிலான உறவு பெரிதும் பாதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இவ்விளையாட்டு போட்டிகளை அதிகாரிகள் அளவில் புறக்கணிக்கப் போவதாக அமெரிக்காவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர், குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர் என்றும் ஆனால் இப்போட்டிக்கான கொண்டாட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகாரிகள் யாரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவில் சீனா அதிருப்தி அடைந்துள்ளது. விளையாட்டில் அரசியல் செய்வதை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவோ லிஜியன், அமெரிக்காவின் இந்த முடிவு ஒலிம்பிக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் கண்டித்தார்.  மேலும் அவர் பேசியதாவது, ஒற்றுமை என்பது தான் தாரக மந்திரம். ஆனால் விளையாட்டில் அரசியலைக் கலந்து ஒலிம்பிக் விதிகளை அமெரிக்கா மீறி செயல்பட்டு வருகிறது.உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாது. இதற்கான பதில் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்,என்றார்.

Related Stories: