புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஓராண்டாக போராட்டம் நடத்திய போது உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடும், அவர்களது வாரிசுகளுக்கு வேலையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தினார். ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாய அமைப்பினர் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றது. இருந்தாலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.