காதலனை பிரிந்த சோகத்தில் 70 வலி மாத்திரைகள் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

சென்னை: புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவர், தனது மகள் மைதிலி (22) காணாமல் போனதாக, கடந்த 4ம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், மைதிலி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மைதிலி மற்றும் அவரது காதலன் பிரேம்குமாரை நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், மைதிலிக்கு ஏற்கனவே கோகுல் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதும், இதை மறைத்து குமாரை காதலித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரேம்குமாரின் உறவினர்களை காவல் நிலையம் வரவழைத்து தகவலை தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்குமாரின் உறவினர்கள், மைதிலியை குமாருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால் போலீசார் அறிவுரை கூறி இரு குடும்பத்தினரையும் அனுப்பி வைத்தனர்.காதலனை தன்னிடமிருந்து பிரித்த மனவேதனையில் மைதிலி, வீட்டில் இருந்த 70 வலி மாத்திரைகளை சாப்பிட்டு நேற்று மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே மைதிலியை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: