இந்திய வம்சாவளி மூத்த கிரிக்கெட் ரசிகை மரணம்

நன்றி குங்குமம் தோழி

கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உலகக்கோப்பை  கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில்  நடைபெற்றது. அப்போது இந்தியா- வங்காளதேச அணிகள் மோதிய போட்டியின்போது மைதானத்தில் மூதாட்டி ஒருவர் இந்திய தேசிய கொடியுடன் காட்சியளித்தார். இந்திய அணி அடித்த ஒவ்வொரு சிக்சர் மற்றும் பவுண்டரியின்போது அந்த மூதாட்டி தான் வைத்திருந்த இசைக்கருவியால் இசைத்து கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினார். அந்த மூதாட்டியின் வயது 87. அவர் பெயர் சாருலதா படேல். போட்டி முடிந்தவுடன், அவரை சந்தித்து இந்திய வீரர்கள் விராட் கோலி, டோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் ஆசி பெற்றனர். அவர்களை முத்தமிட்டு அந்த மூதாட்டி வாழ்த்தினார்.  அந்த 87 வயது விக்கெட் வீழ்ந்து விட்டது. ஆம். கடந்த ஜனவரி 13ம் தேதி அவர் மரணம் அடைந்துவிட்டார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சாருலதா படேல் லண்டனில் வசித்து வந்த நிலையில் அவரது திடீர் மரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இது தொடர்பாக பாட்டி குடும்பத்தினர் பதிவிட்டுள்ள இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘13/01/2020 அன்று மாலை 5.30 மணிக்கு எங்கள் பாட்டி இயற்கை எய்தினார். அவர் ஒரு இனிமையான, அசாதாரணமான பெண்மணி. கடந்த ஆண்டு அவரை சிறப்பு மிக்கவராக உணரவைத்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவிற்கும் மிக்க நன்றி.

உங்களைச் சந்தித்தது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அவரது ஆன்மாவை சிவபெருமான் ஆசீர்வதிப்பாராக’ என CricDaddy என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மரணம் அடைந்த மூத்த ரசிகை சாருலதாவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ‘இந்திய அணியின் மேன்மையான ரசிகை சாருலதா படேல் ஜி எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருப்பார். மேலும் விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும். அவரது ஆன்மா அமைதியில் நிலைத்திருக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Related Stories: