காஞ்சிபுரம்: லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த வக்கீல் மோகன்தாஸ் தலைமையில் சந்திரன், சுரேஷ் ஆகியோர், டிஐஜி சத்தியப்பிரியாவை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் மதூர், ஆற்பாக்கம், படப்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகளும், எம்சாண்ட் தயாரிப்பு நிறுவனங்களும் இயங்குகின்றன. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு இடங்களுக்கு எம்சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
அதுபோல் செல்லும் லாரிகளை, லாரி உரிமையாளர் சங்கத்தினர் எனக் கூறி, பல்வேறு இடங்களில் வழிமறித்து சிலர் பணம் பறிக்கின்றனர். மேலும், அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி, பாரத்துக்கு ஏற்றபடி பணம் பறிப்பதுடன், லாரி ஓட்டுனர்களையும் அடித்து உதைத்து, லாரிகளை சிறைப்பிடிக்கின்றனர். எனவே, கனரக லாரி உரிமையாளர்கள் சங்கம் என கூறி, பணம் பறிக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி. சத்யபிரியா உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.