அன்புமணி வேண்டுகோள் மூத்த குடிமக்களுக்கு ரயிலில் மீண்டும் கட்டண சலுகை

சென்னை: மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயிலில் கட்டண சலுகை வழக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: இந்தியாவில் அனைத்து தொடர்வண்டிகளும் கொரோனா பரவலுக்கு முந்தைய கால அட்டவணைப்படி இயங்க தொடங்கி விட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கட்டண சலுகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் கட்டண சலுகையை நிறுத்தி வைப்பது நியாயமல்ல. மூத்த குடிமக்களுக்கு வருவாய் ஆதாரம் இல்லை. அவர்களில் பலர் கட்டண சலுகைக்காகவே தொடர்வண்டியில் பயணிக்கிறார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க தொடர்வண்டி வாரியம் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: